திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

புதன், 29 மார்ச், 2023

நலம் தரும் எண்ணெய் குளியல்

 நலம் தரும் எண்ணெய் குளியல்: 

தமிழர்களின் பாரம்பரிய முறைகளில் எண்ணெய்  குளியல் அல்லது எண்ணெய்   முழுக்கு மிக முக்கியமானது.

``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெய் முழுக்கு எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. குளிர் காலத்தில் வாரம் ஒரு  முறையும், வெயில் காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய்  முழுக்கு எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை,ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை எண்ணெய் முழுக்கு செய்ய வேண்டும். ஆனால் இந்த பழக்கம் காலமாற்றத்தால் மாறி தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக மாறியுள்ளது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் ?

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பலம் பெற்று உடலில் எந்த நோயும் வராமல் உறுதிபடும் . உடலின்  அதிக உஷ்ண தன்மை குறைவதால் முடி உதிர்வு பிரச்சனை சீராகி தோல் வறண்டு போகும் பிரச்சனை சீராகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராகுவதால் சோம்பல் போன்ற பிரச்சனை தீர்வதோடு, உடலின் குற்றங்கள் அனைத்தும் சீராகிறது.

எந்த எண்ணெய் சிறந்தது ?

நல்லெண்ணெயே மிகவும் சிறந்த எண்ணெய். இது போக விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணைய்,விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவாக கலந்து முக்கூட்டு எண்ணெயாக பயன்படுத்தலாம்.மேலும் நோய்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் முழுக்கு கடைப்பிடிக்க படுகிறது. அதில் நொச்சி தைலம், சுக்கு தைலம் போன்றவை அடங்கும்.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும் ?

பாரம்பரிய மருத்துவ முறைப்படி உடலில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை பரவலாக தேய்க்க வேண்டும். அதில் மூன்று துளி காதிலும், இரண்டு துளி மூக்கிலும் விட வேண்டும். பிறகு 30  முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிட வேண்டும். பிறகு, மூலிகை பொடி போட்ட வெந்நீரில் எண்ணெய் பிசகு போகும் வரை நன்கு குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி போட்டு தலை மற்றும் முடிக்கு தூபம் போட வேண்டும். நல்லெண்ணையில்  வைட்டமின் E  சத்து அதிகம் உள்ளதால் அது உடலின் தோலின் வயதாகும் தன்மையை நிறுத்தி, நம் தோலை பிரகாசம் அடையச் செய்யும்.

சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள் ?

சிலருக்கு எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்கலாம். அதற்கு ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை சுக்கு தூள், ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை  60 மில்லி நல்லெண்ணையில் காய்த்து  எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்காது.

தலைக்கு தேய்த்து குளிக்க எது சிறந்தது ?

தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய் தான் சிறந்தது. ஷாம்புகளில் அதிக கெமிக்கல் இருப்பதாலும், அவை எண்ணெய் பிசகு சரியாய் போக்காது என்பதாலும் சீயக்காய் தான் சிறந்தது.

உடலிற்கு தேய்த்து குளிக்க  நலங்கு மா,பாசி பயறு மாவு சிறந்தது.

புதியதாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் உடல் சோர்வு, சளி பிடிக்கும் தன்மை இருக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சரியாக தொடர்ந்து கடைபிடிக்க இதுவும் படி படியாக மறைந்து போகும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கழுதை பால் என்னும் அமுதம்


      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, வெயிலில் மழை பெய்தால் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் என கழுதையை  மையமாக வைத்து பழமொழிகள் உள்ளன.அந்த காலத்தில் வண்ணர்கள்  ஊர் மக்களின் துணி மூட்டைகளை ஆற்றங்கரைக்கு   பொதி சுமப்பதற்கு என்று கழுதையை  பிரத்தியேகமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார் வாகனங்களும்  இதை ஓரம் தள்ளிவிட்டது. அகநானூற்றில் , உப்பலத்தில் இருந்து உப்பு மூட்டைகளை கடும் வெயில், கரடு முரடான பாதை என்று பாராமல் எடுத்து  செல்ல பயன்படுத்தப் படுகிறது என்று கழுதைகள் பற்றி பாடல் ஒன்று விவரிக்கிறது. உப்பு மட்டும் இன்றி பல்வேறு விளைபொருள்களை கழுதை மீது வைத்து சென்று உள்ளனர். 

                            

                             'வெள்வாய்க் கழுதைப் புல்லினம்' (புறம் 392 ) 

     கழுதையின் வாய் வெள்ளை நிறமாக இருக்கும் என்று புறநானூறு கூறுகிறது. 

    அக்காலத்தில் கழுதையை  வைத்து விவசாயம் செய்ததாக எந்த குறிப்பும் கிடைக்க பெறவில்லை. கழுதையை வைத்து நிலம் உழுவதை இழிவான செயலாக பார்த்தனர். போரில் தோற்றுப்போன மன்னர்களை அவமானம் செய்ய அம்மன்னர்க்கு உட்பட்ட நிலங்களில் கழுதைகளை பூட்டி உழுது வெள்ளை வரகு,கொள்ளு போன்றவை விதைக்கப் பட்டதாக புறநானூறு கூறுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித நாகரிக வளர்ச்சிக்கு தேவையாக இருந்தாலும், அது சுற்றுச்சூழலுக்கும் , மற்ற உயிர்களுக்கும் இடையூராக உள்ளது. சமீபத்திய ஒரு புள்ளி விவரம் தமிழ்நாட்டில் ஆயிரம் கழுதைகளுக்கு குறைவான கழுதைகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கழுதைகளின் தேவை குறைந்ததால் உணவு  பட்டியலிலே  இல்லாத கழுதைகளை தற்போது ஆந்திர பகுதியுள் உணவாக உண்ண ஆரம்பித்து உள்ளனர்.

    திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை Biodiversity conservation foundation விஞ்ஞானி ஏ .குமரகுரு ஹிந்து நாளிதழுக்கு 25, ஜூலை  2020 அன்று கொடுத்த பேட்டியில்  மற்ற விலங்கினங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நம் சமூகத்தில் கழுதைக்கு கொடுப்பது இல்லை. இதுவே இதன் அழிவுக்கு காரணம். சமகாலத்திய அழிவு பட்டியலில் கழுதையும் சேர்ந்து விட்டது.

கழுதை பாலை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்:

    மற்ற கறவை இனங்களில் இருந்து கழுதையானது சற்று வித்தியாசம் படுகிறது. குறிப்பாக பால் கறப்பதில் ஒரு நாளைக்குள் 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் பால் மட்டுமே கறக்கும். கழுதையின் எண்ணிக்கை குறைந்ததால் தற்போது  இதன் ஒரு சங்கு பால், ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை  விற்கப்படுகிறது .இதற்கான காரணம் நம்முடைய புறக்கணிப்பும்  மற்றும் அதன்  பால் தற்போது உலக டாப் கிளாஸ் பாலில் ஒன்றாக விற்கப்படுகிறது .   இத்தாலி நாட்டில் நோய்  பாதித்த குழந்தைகளுக்கு,உடல்  இளைத்த குழந்தைகளுக்கும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கும்  கழுதையின் பால் ஒரு சிறந்த மாற்று பாலாக பயன்படுத்தி வருகின்றனர். 

    இதில் முக்கியமாக மாட்டுப்பால் புரத அல்ர்ஜி (cow milk protein allergies) (CMPA)உண்டாகும் குழந்தைகளுக்கு வெளி நாடுகளில் கழுதை பாலை மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். மாடுகளின் பாலில் உள்ள கொழுப்பு, புரதம், inorganic உப்புகள் கழுத்தை பாலில் குறைவாகவே உள்ளது. ஆனால் மற்ற பாலை விட தாய்ப்பாலுக்கு நிகரான அதிக  அளவு லாக்டோஸ் உள்ளது. இதன் காரணமாக கழுதை பால் இனிப்பாக உள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தாய்ப்பாலை விட உயர்ந்ததாக கழுதை பாலை கூறி உள்ளனர். ஏறக்குறைய தாய் பாலிலும் கழுதை பாலிலும் ஒரு விகிதாச்சார சத்துக்கள் உள்ளன.

    கழுதை பாலில் அதிக அளவு உள்ள லாக்டோஸ் குழந்தைகளின் வயிற்றில் சரியான அளவு கால்சியம் சத்தை உரிய வைத்து குழந்தைகளின் எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.மேலும் குழந்தைகளின் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள பேட்டி ஆசிட் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்வது மட்டும் அல்லாமல் அவர்களின் மூளை வளர்ச்சியை சீர் செய்து நியாபக ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. பெரியவர்களுக்கு atherosclerosis மற்றும் இதய நோய்   உள்ளவர்களுக்கு இது நோயின் தாக்கத்தை சீர் செய்வதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

சித்த மருத்துவத்தில் கழுதை பால் பற்றி என்ன கூறி உள்ளனர்:

"கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்

 தழுதளையுள் வித்திரதி தானே - யெழுகின்ற

ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிரங்கு 

கட்டியிவை போக்குங் கழறு"

 

"கத்தபத்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்

சித்தப்பிரமை பித்தந் தீருங்காண் - தத்திவரும் 

ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்

செய்ய மடமயிலே செப்பு"

    மிகவும் இனிப்பான கழுதைப்பால் வாதநோய், கரப்பான், புண், தழுதளைநோய், கட்டி, கிரந்தி, சீழ்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத-ரணம், புத்திமாற்றம், பித்ததோடம், கபநோய் இவை களைப் போக்கும்.மேலும் கழுதை பாலை ஓணான் ரத்தத்துடன் கலந்து கிரந்தி நோய் (Pediatric Heart Disease) பாதித்த குழந்தைகளுக்கு கொடுத்த பழக்கமும் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

    மேற்கண்ட மருத்துவ பயன்கள் மட்டும் அல்லாமல் கழுதை பாலில் Anti-Microbial,Anti-Viral,Anti-Tumour,Anti-Stress போன்ற மருத்துவ தன்மை உள்ளதாக நவீன ஆய்வுகள் கூறுகிறது.

    இப்படி மருத்துவ பயனை மட்டும் கொண்டிராமல், தோல் சார்ந்த அழகியலுக்கும் இதன் பால் பயன்படுகிறது,உதாரணமாக கிளியோபாட்ரா போன்ற அரசிகள் தங்கள் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கழுதை பால் குளியல் எடுத்த வரலாறு  எல்லாம் உண்டு. இதில் உள்ள Anti-Agening, Anti-Oxident, Vitamin சத்துகள் வயதாகும் தன்மையை தடுக்கிறதாம். தற்போது ஹாலிவுட் முதல் கோலிவுட் அழகிகள் வரை கழுத்தை பாலில் செய்த Face Cream மை பயன்படுத்துவதாக தகவல். 

    இப்படி பட்ட மருத்துவ குணம் வாய்ந்த கழுதையை  சரியான முறையில் அழிவு பாதையில் இருந்து மீட்டு, அவற்றின்  எண்ணிக்கையை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இதற்கான முறையான ஒரு அமைப்பை அமைத்து கால்நடை துறை பராமரிக்க வேண்டும்.

                                  

              "இப்படி பட்ட கழுதை பாலை அமுதம் என்று சொல்லலாம்"

மருத்துவர் விக்னேஷ் குமார் 877-858-7349




ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உணவா ? மருந்தா ? நஞ்சா ? ( பகுதி 2) -சித்த மருத்துவம்

 வணக்கம், உணவா ? மருந்தா ? நஞ்சா ? என்ற கட்டுரை தொடரில் இரண்டாம் பகுதி பற்றி நாம் காண்போம்,

முதல் பகுதியை படிக்க பகுதி 1


                                                                               

மக்கள் தற்காலத்தில் எளிய மருத்துவத்தை  பெரிதும் விரும்புகின்றனர்,இந்த கொரோனா பெரும்தொற்றுக்கு பிறகு தமிழர் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மீது நமக்கு தற்போது பெரிய ஆர்வம் மீண்டும் வந்துள்ளது,சமீபத்தில் உலக சுகாதார மையம் நம் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு  உலகளவில் அங்கீகாரம் கொடுத்துள்ளது இதன் மூலம் பல ஆராய்ச்சிகள் சித்த மருத்துவத்தின் மீது நடக்கும்,நம் சித்த மருத்துவத்தின் தொன்மையை, அறிவியலின் துணை கொண்டு ஒரு புதிய பாதைக்குள் பயணம் செய்ய  வைக்கமுடியும்,நம் நாட்டு மக்கள்  மட்டும் பயன் பெரும் சித்த மருத்துவத்தை உலக மக்கள் அனைவரும்  பயன் பெற வாய்ப்புகள் உள்ளன.

இப்போது நாம் நம் கதைக்கு வருவோம்,உணவு மருத்துவம் பற்றி ஏன் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை? சீனா தவிர ஆங்கில மருத்துவத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட  உலக நாடுகள்  இப்போதுதான் வலுவாக உணவே மருந்து (FOOD IS MEDICINE) என்ற கருத்துக்கள் தங்கள் பாதங்களை  எடுத்து வைக்கிறது, தவறான உணவு பழக்கத்தை  கடைபிடித்ததின் விளைவு உலகம் முழுவதும் 5 இல் ஒரு இறப்பு சரியான உணவு அதாவது அவர் அவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவு இன்மையால்,உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது,இந்த இறப்பு விகிதம் புகையிலையால் ஏற்படுவதை விட அதிகமாம்.உடலுக்கு ஏற்ற உணவு என்றால் என்ன ?,  உணவானது அவர் அவர் வயதிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,உணவானது அவர் அவர் உழைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,இதில் முக்கியமாக  நோய்க்கு ஏற்ற உணவு அவசியம், இந்த உணவு தேவை என்பது ஒவ்வொரு நோய்க்கும் மாறுபடும்.


இந்த உணவு மருத்துவம் ஒரு நோய் உள்ளவர்களுக்கு எப்படி பயன் அடைய  வைக்கிறது ?


நோய்க்கு அல்லது உடல் சுகமின்மைக்கு குறிப்பிட்ட  உணவு வகைகள் ஒரு மருந்தாக செயல் படுகிறது  இதை  Nutraceuticals மற்றும்  Functional Foods என்றால் என்ன, என்பதை பற்றி முதல் பகுதியுள் நான் பேசி உள்ளேன்.

நமக்கு திடிர் என்று ஒரு உடல் நல குறைவு வருகிறது என்று கற்பனை செய்து கொள்வோம்,ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலில் நாம் உள் நோயாளியாக அட்மிட்  ஆகிரோம்,மருந்து மற்றும் ஹாஸ்பிடல் செலவு செய்த பில்லுடன் நாம் மருத்துவமனையில் உண்ட உணவு பில்லும் சேர்த்து வரும்,அதில் வரும் உணவின் பில்லோ  நமக்கு வழங்கிய மருந்தின்  அளவே வரும், ஆனால்  நாம் உண்டது கீச்சாதி,இட்டிலி  போன்றவையாக இருக்கும்,  கேட்டால் ஹாஸ்பிடல் டயட் என்று கூறுவார்கள்.என்ன cm அம்மா 1 கோடி ரூபாய்க்கு இட்டிலி சாப்பிட்ட கதை போன்று உள்ளதா ?அந்த மருத்துவமனைகளில் ஏன் அவ்வளவு  உணவு தொகை வாங்குகிறார்கள் என்று தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.


Medically Tailored Meals (MTM) என்றால்

என்ன ?


Medically Tailored Meal ( MTM) என்றால் அவர் அவர் நோய் நிலைக்கு ஏற்ற உணவுகளை, உணவியல் நிபுணர்களால் மற்றும் பிற  மருத்துவ நிபுணர்களால் சரியான முறையில் நோயின் நிலை அறிந்து நோய் நிலையை மேம்படுத்த பரிந்துரை செய்யப்படும் உணவுகளாகும்.

1980 இதில் அமெரிக்காவில்  HIV /AIDS  நோய்க்கான சரியான மருந்து கண்டுபிடிக்காத போது, அந்த  நோயாளிகளுக்கு நோய் முற்றாமல்  நோயை  சிறந்த ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகளை கொடுத்து மருத்துவம் செய்தனர்,இதனால் அந்த நோயாளிகளின் நோய்  குறைந்தது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.இதில் இருந்து உணவே மருந்து ( Food as medicine)  என்ற இயக்கம் அமெரிக்காவில் வளர தொடங்கியது.இதில் இருந்துதான் உணவே மருந்து  medically tailored meal (MTM) சாக மேலை நாடுகளில்  உருவானது .நமது கொரோனா கால கட்டத்திலும் MTM போன்ற உணவு வகைகளை,ஊட்டச் சத்து மற்றும் உணவு நிபுணர்கள்  நமக்கு பரிந்துரை செய்தனர்.


 MTM  இதனால் என்ன பயன் ?


 தங்களது நோய்களுக்கு  சரியான  உணவு வகைகளை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு, மாதம் தங்களது மருத்துவ செலவில் 16 % பணத்தை சேமிப்பு செய்கின்றனராம்.மேலும் நாள்பட்ட நோய் உள்ள நோயாளிகள் இந்த உணவே மருந்தை (MTM ) பின்பற்றும்போது  50 % வரை அவர்கள் நோய்க்கு மருத்துவமனைக்கு வருகை தரும் எண்ணிக்கை குறைகிறதாம்.தற்போது    வெளிநாடுகளில் pharmacy நிறுவனங்களுக்கு  பிறகு,சில நிறுவனங்கள் medically tailored meals- சை வீட்டிற்க்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள்.இதை நகைப்பாக farmacies என்று கூட கூறுகின்றனர் ,கூடிய விரைவில் இந்த வகை உணவுகளை நம் நாட்டில் உள்ள உணவு சேவை நிறுவங்களிலும் காண வாய்ப்பு உள்ளது. 


MTM  பற்றி சித்த மருத்துவம் என்ன கூறுகிறது ?


 முதலில் பத்தியம்( Regimen of Diet ) என்றால் என்ன என்பதை காண்போம்,  சித்த மருத்துவத்தில் பத்தியம் என்பது நோய்க்கு மட்டும் அல்லாமல் நாம் எதுத்துக்கொள்ளும் மருந்துக்கும் கூறப்பட்டுள்ளது,பத்தியம் என்பது  அந்த நோய்க்கு சேர்க்க வேண்டிய உணவு  பொருட்களையும்,சேர்க்க கூடாத உணவு  பொருட்களையும்  கூறுகிறது.இப்படி பட்ட பத்திய வகைகளில் உப்பில்லா பத்தியம், இச்சா பத்தியம்,கடும் பத்தியம் போன்ற நோய்க்கு ஏற்றவாரு பல வகை பத்தியங்கள் உள்ளன.இப்படி ஒரு நோயாளிக்கு பத்தியம் கூறும் போது  அவர்களின் உடல் பலம்,உடல் நிலைமை,நோயின் வன்மை,காலம்  மற்றும் சீதோஷண நிலை  இவைகளை சரியான படி அனுசரித்து பத்திய முறை சித்த மருத்துவர்கள் கூறுவார்கள்.


பத்தியத்தின் பெருமை:


''பத்தியத்தா லுண்டாகும்  பண்டிதற்குப் பேராண்மை

 பத்தியத்தா லுண்டாகும் பண்டிதங்கள் - பத்தியத்தை

விட்டிடலை விட்டார் பிணிவகைகள் வித்தரிக்கும்

விட்டாற் பறக்கும் வினை”

-தேரன் வெண்பா செய்-600


பத்தியத்தை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவம் செய்யும் மருத்துவனும்,மருந்தும் மேன்மை கொள்வார்கள், மேலும் நோயாளியும் குணமடைவான் ,அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் நோய் மிகும்.இப்படி பத்தியத்தின் பெருமை பற்றி சித்த மருத்துவம் கூறுகிறது.

எனவே பத்திய முறையுடன் மருந்தை மருத்துவர் கூறும்படி பின்பற்றினால் நோய் தீருவது சுலபம் என்று புரிகிறது,இங்கு பத்தியம் கடைபிடிக்கவில்லை நோய் தீராது அல்லது மிகும் என்று கூறி உள்ளனர்,இது ஏன் என்று  நாம் ஒரு உதாரணத்தோடு காண்போம்  சர்க்கரை நோய் வந்த நபர், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட மருந்தை ஒரு குறிப்பிட்ட டோஸேஜில்  எடுத்து கொள்கிறார் என்றால், அவர் சரிவர உணவு கட்டுபாடு (அதிக சர்க்கரை சத்து உள்ள பொருட்களை தவிர்த்தல்)  அல்லது Regimen of Diet அல்லதுபத்தியம்  இல்லை என்றால் நோய் அப்போதைக்கு  கட்டுக்குள் வரும், ஆனால் நாள்பட நாள்பட நோய் அந்த மருந்துக்கு கட்டுப்படாது,நோய் மிகும் பிறகு முன்பு கொடுத்த மருந்தை விட வீரியம் மிக்க வேறு மருந்தை தர வேண்டும்,

இப்படிதான் நோய் தீராது என்று கூறி உள்ளனர்.சித்த மருத்துவத்தில் பத்தியம் என்றால் பெரிய வார்த்தையாக மக்கள் காண்கிறனர், ஆனால் இங்கு பத்தியமகா கூறுவதோ நம் நாட்டு உணவு வகைகளைதான் ஆனால் அதில்  கொஞ்சம் வித்யாசம், அது எப்படி என்றால் சில நோய்களுக்கு காய்கறிகளை முற்றியதாக உணவில் சேர்க்க சொல்லாமல் பிஞ்சாக எடுக்க கூறுவோம். உதாரணம் கத்தரி பிஞ்சு,முருங்கை பிஞ்சு,அவரை பிஞ்சு போன்றன வாத நோய்க்கு சிறந்த பத்திய உணவு.வாழை கச்சல் சர்க்கரை நோய்க்கு சிறந்த பத்திய உணவு.



என்னிடம் வருபவர்கள் சிலர் சித்த மருத்துவத்தில் பத்தியம் சொல்விங்க சார் அதான் நிறைய பேர் உங்க மருத்துவத்த விரும்பமாட்டங்கிறாங்க என்று கூறுவார்கள்,எனக்கு சிரிப்பாக இருக்கும்,ஆனால்  சித்த மருத்துவத்தில் கூறும்  பத்திய முறை போலதான் தற்காலத்திய  Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இருக்கிறது,அனால் எனது பார்வையில் பத்திய முறையே என்பது  இதை விட மேம்பட்டதாக கருதுகிறேன்.பழைய சாதம் எப்படி Inflammatory Bowel Disease நோய்க்கு சிறந்ததோ, அப்படி பல உணவு வகைகள் பத்திய உணவாக  சித்த மருத்துவத்தில் உள்ளன.

சித்த மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் பலவகையான Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இந்த உலகுக்கு கிடைக்கும்.

   

தொடரும் ….