திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

செவ்வாய், 10 ஜனவரி, 2023

மருந்தாகும் அபின்-சித்த மருத்துவம்


      தீதும் நன்றும் பிறர் தர வாரா 
                                     -புறநானூறு


    நன்மையும் தீமையும் கலந்தே இந்த உலகம் படைக்கப்பட்டது, இயற்கை என்பது அழகு என்று நம் நினைவில் உள்ளது, உண்மையில் இயற்கை ஒரு ஒழுங்கின்மை,அதை ஒழுங்கு படுத்தியதின் விளைவாகவே விவசாயம் தோன்றியது.
   ஏன் இந்த விரிவுரை என்றால் நாம் பார்க்க போகும் மூலிகை பொருள் அபின்,இதன் அரசியல்,சமூக பயன்பாடுகள், வரலாறு, முக்கியமாக சித்த மருத்துவத்தில் அதன் மருத்துவ பயன் பற்றி நாம் காண்போம்.
தற்போது இந்தியாவில் அபின் பயிரானது மிகவும் கட்டுப்பாடான சூழ்நிலையில் மட்டும் பயிரிடப்படுகிறது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,உத்திர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சில மாவட்டங்களில் மட்டும் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்விற்காக பயிரிடப்படுகிறது.
    இதன் விதைகள் நவம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டு,பின் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.இப்படி அறுவடை செய்யப்பட்ட அபின் அதாவது அபின் செடியின் பாலில் இருந்து மார்பின்,கோடின்,டிபேய்ன் போன்ற இரசாயன மூலக்கூறுகள் பிரித்து எடுக்கப்படுகிறது.பின் அதன் காய்களை உலர்த்தி அதன் விதைகள் சேகரிக்க படுகிறது,இதுவே நமது வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள கசகசாவாகும்.

        அபின் இந்தியவில் தடை செய்யப்பட்ட போதை பொருள்,
ஆனால் அதன் விதைகளுக்கு நம் நாட்டில் தடையில்லை,கசகசாவிற்கு போதை தரக்கூடிய தன்மை இல்லை,
இது நம் நாட்டில் தடை செய்யப்படவில்லை, ஆனால் விதைகள் மூலம் இந்த செடியை பயிர் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது பல அயல் நாடுகளில் இதன் விதைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.விதைகள் எடுக்கப்பட்ட காய்களில் சிறிய அளவில் மார்பின் இருப்பதால் போதைக்கு புகையாக பிடிக்கப் படுகின்றது,இது வட இந்தியாவில் பெரும்சிக்கலாகஉருவெடுத்துள்ளது.சில விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக இதை தனி நபர்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
அபின் வரலாறு:
        அபினிக்கும் மனித இனத்திற்கு 6000 கால தொடர் பந்தம் இருந்து இருக்க வேண்டும், முதலில் இது எண்ணெய் தாவரமாக தரைக்கடல் பகுதியில் வளர்ந்தது என கருத்துப்படுகிறது.புத்தரின் இமையில் இருந்து அபின் செடி உருவானது என கூறப்படுகிறது.
    அபினி யின் வரலாறானது மேற்கத்திய நாடுகளான கிரீஸ்,
கிரித்தே சைப்ரஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற பகுதிகளில் அபினியின் பயன்பாட்டை பற்றி வரலாறு மற்றும் தொல்லியல் எச்சங்கள் கிடைக்கிறது.
    இந்தியாவில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு,பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து அபின் வணிகம் நடந்து வந்துள்ளது.பின் வந்த சுதந்திர இந்தியா அபின் பயிரிட மற்றும் விற்க சட்ட திட்டங்களை கொண்டு வந்தது.
   இத்தனை நாடுகள் ஏன் அபினை கண்டு அஞ்சி தடை செய்துள்ள காரணத்தை அறிய வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கி பார்க்கவேண்டும்.
முதலாம் அபின் போர்:
    சீனாவில் 1644 ஆண்டு பேரரசர் சூங் சென் புகையிலை பயன்பாட்டை அறவே தடை செய்த பிறகு போதைக்காக அபினி பழக்கம் பெருக தொடங்கியது,இதன் விளைவாக சீனாவின் தேவைக்கு பெரும்பாலும் இந்தியாவில் அபினி பயிரிடப்பட்டுள்ள.
    இதனை உற்று நோக்கிய பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி இந்த வணிகத்தில் மிகவும் ஆர்வம் காட்டியது. சீனாவில் அபினை இறக்குமதி செய்து அதற்கு மாற்றாக தேயிலையை வாங்கி கிழக்கு இந்திய கம்பெனி, இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்தது.1793-ல் பிரிட்டிஷ் அரசு சைனவுடன் அபின் வர்த்தகத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுத்தது ஆனால் அப்போது இருந்து மன்சூ பேரரசு அதை சில காரணங்களால் நிராகரித்து விட்டது.
     இதற்கு பின் அபினை கிழக்கு இந்திய கம்பெனி பெருவாரியாக சீனாவுக்கு கடத்த தொடங்கியது.சீன மக்களை அபின் போதைக்கு உட்படுத்தி அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை கெடுத்து அவர்களின் வேலை செய்யும் ஆர்வத்தை சிறிது சிறிதாக இழக்க வைத்தனர். சீனாவிற்கு உள் வரும் அபினியை அந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, இதன் காரணமாக சீன அரசு பிரிட்டிஷாரின் அபின் சேமிப்பு கிடங்குகளை தீ வைத்து எரித்தது.
    இதன் விளைவாக பிரிட்டிஷ் 1840 ஆம் ஆண்டு சீனா மீது போர் தொடுத்தது.இதுதான் முதல் அபின் போர் ,போரின் இறுதியில் சீனா தோல்வி அடைந்தது,பின் அதற்கு ஈடாக சீனாவில் அபின் விற்பனை செய்ய அனுமதியிம்,சில நிலபுலன்களை பிரிட்டிஷ்க்கு ஈடாக கொடுத்தது.
இரண்டாம் அபின் போர்:
    இந்த போர் நடந்து சுமார் 15 ஆண்டுக்குள் பிரிட்டிஷ்க்கும் சீனாவிற்கும் மற்றொரு போர் நடந்தது துரதிஷ்டவசமாக இதிலும் சீனா தோற்றது இதற்கு ஈடாகவும் பெருவாரியான பணம் மற்றும் இடங்களை சீனா அந்த நாட்டிற்கு இழப்பீடாக தந்தது.
    இந்த அபினி போர்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க சமூக பண்பாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின. முன்பு கூறியபடி பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மண்ணிலிருந்து அபின் பயிரை வளர்த்து வந்தது. சீனாவில் தடை முயற்சிகள் நீண்டு கொண்டு போக போக பிரிட்டிஷ் அரசாங்கம் வெவ்வேறு புதிய வணிக யுக்திகளை கண்டுபிடித்து இந்தியாவின் அபினியை சீனாவிற்கு அதிக அளவில் கடத்தியது.தற்போது இந்தியாவிற்கு பெருவாரியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அபின் கடத்திக் கொண்டு வரப்படுகிறது.
        இப்படிப்பட்ட பொருளாதார சீரழிவை உண்டாக்கி பெரும் போர்களை உருவாக்கும் என்பதால் பல உலக நாடுகள் அபினியை தடை செய்து வைத்துள்ளது.

சித்த மருத்துவத்தில் அபின்:
    அபின் இது கசகசா காயின் பால்,அபின் செடியின் தாவரவியல் பெயர் Papever Somniferum,Linn.
" நல்லவபி னிக்குணத்தை நாடறியும் நாம்புகல்வ  
தல்லகுன்மம் வாதம் அருஞ்செவிநோய்-பல்லின்வலி
பேதிமந்தம் அத்திநோய் பீனசம்போம் வன்மையுண்டாம் 
சாதியதி ரச்சுத்தி தான்"

                 -அகத்தியர் குண வாகடம் 

    நன்று சுத்தி செய்த அபின் வயிற்றில் தோன்றும் குன்மம்,வாத நோய்கள்,காது நோய்,பல் வலி,பேதி ,மந்த நோய் , அத்தி நோய்,பீனிச நோய் போன்றவை போக்கி உடலுக்கு நல்ல வன்மையை உண்டாக்கும் என கூறியுள்ளனர்.
    இதற்கு Analgesic,Anti spasmodic,Sedative, Stimulant, Diuretic போன்ற முக்கிய செயல் திறன் உள்ளது.
    அக்காலத்தில் காலரா நோய்(ஊழி நோய்) வந்த நோயாளிகளுக்கு பேதி உண்டாகி, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து(dehydration)இறந்து விடுவார்கள்.இந்த நோய் பெருவாரியாக இறப்பை அந்த காலத்தில் உருவாக்கியது. 
     இந்த dehydration-னால் ஆன இறப்பை பேருவாரியாக கட்டுபடுத்தி வைத்தது அபினியால் ஆன மருந்துகளே, அவைகளில் சில ஊழி மெழுகு,சாமளாதேவி மாத்திரை,கபாட மாத்திரை போன்றவை ஆகும்.இதில் குறிப்பாக கபாட மாத்திரை தற்போது வந்த கோவிட் பெரும் தொற்றில் பேதி குறிகுணங்களுடன் இருந்த நோயாளிகளுக்கு சிறப்பாக வேலை செய்தது.
    அபின் சேர்ந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் கழிச்சல் மற்றும் பல நோய்களுக்கு, நோயின் வலிகளை போக்க மட்டும் அல்லாமல் அதனால் வந்த பிற இன்னல்களையும் போக்க பயன்படுகிறது.
       தற்காலத்தில் நாம் வீட்டில் அபினியை பயன்படுத்த முடியாது, அனால் அபினியின் விதைக்கு அதாங்க கசகசாவுக்கு அபின் போல சில மருத்துவ குணம் உள்ளது,அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.







சனி, 7 ஜனவரி, 2023

தங்க பஸ்பமும் எம்ஜிஆரும்

  இந்திய மக்களுக்கும் தங்கத்திற்கும் ஒரு நீங்காத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது,கடந்த 2021 வருடத்தில் இந்திய இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு சராசரியாக ஆயிரம் டன்.

தங்கத்தினை ஆபரணமாக மக்கள் பயன்படுத்திய காலம் தொட்டு சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
தங்க பற்பத்தை பற்றி அறியிம் முன் முதலி பற்பம் என்றால் என்ன என்பதையும்,அதன் அறிவியல் விளக்கத்தையும் நாம் முதலில் காண்போம்.
பற்பம் என்றால் சாம்பல் அல்லது நீரு , சித்த மருத்துவத்தில் ஒரு மூலிகையை அல்லது தாது பொருட்களை முறைப்படி பற்பமாக்கி நம் உடல் ஏற்க்கும் வன்னம் நோய்களுக்கு மருந்தாக தருவதாகும்.இப்படி செய்பட்ட  பற்பத்தை calcined oxide என கூறுவர், இந்த முறையை பற்பமாக்குதல் என கூறுவர்.
    இதை நவீன அறிவியலில்  நாம் 12 வகுப்பு புத்தகத்தில் உள்ள  Calcination process என கூறும் முறையாகும், calcination process என்பது நீராக்குதல் அல்லது சுண்ணாமாக்குதல் என பொருள்,ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒரு இராசாயன பொருளை ஒரு குறிப்பிட்ட சுற்றுபரத்தில் வெப்பம் அடைய வைக்கும் போது அதில் உள்ள கழிவு பொருகள் நீங்கி அது சுண்ணம் ஆன நிலை அடையும்.

      சித்த மருத்துவத்தில் இந்த முறை எப்படி என்றால், பற்பம் ஆக்க வேண்டிய மூலிகை அல்லது தாது பொருள்களை ( தாது பொருள்கள் என்றால் உலோகம், உயிருள்ள சீவன்கள் மற்றும் மண்ணில் உள்ள தாது பொருள்கள்) முறைப்படி சுத்தி செய்து (சுத்தி செய்தல் என்றால்  மருந்தாக மாற உள்ள பொருள்களின் நச்சு தன்மை நீக்கும் முறை என சுருங்க கூறலாம்),
பின் அதை முறைப்படி மூலிகை சாறுகள்,திரவம் போன்றவை கொண்டு அறைத்தோ அல்லது அறைக்காமலோ , இரண்டு வாயகன்ற மண் அகல் நடுவில் வைத்து வலுவாக மூடிவிட வேண்டும்.
பின் வரட்டி போன்ற பொருட்களை கொண்டு தீமூட்டி சுடு செய்து, அரைத்து எடுத்து கொள்ளும் முறையாகும்,இந்த முறையை புடம் போடுதல் என கூறுவர் ஆங்கிலத்தில் calcination process என கூறுவர், இப்படி மருந்துக்காக முடித்த பொருள்கள் பெரும்பாலும் calcined oxide -டாக மாறி இருக்கும். 
    இப்படி முடிந்தது பற்பமானது அதன் தன்மைக்கு ஏற்ப பல புடம்  செல்லும்,இதன் மூலம் அந்த மருந்து இலகு தன்மை அடைந்து ஒரு நுண்ணிய நிலை அடையும்.அந்த நிலை என்னவென்றால் அதன் ஒரு மூலக்கூறு   10⁻⁹(nano size)  என்ற நிலைவரை அடையும்.
 தற்போது ஆங்கில மருத்துவத்தில் பிரபலாமாகி வரும் nano medicine,
இதில் உலோக பொருட்கள் மிக நுண்ணிய 10⁻⁹  நானோ size -க்கு மாற்றி நோய்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர், உதாரணமாக தங்கத்தை gold nano particles (Au nps) நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் ஆச்சரியம் என்னவெனில் தங்க பற்பமும் இதே அளவீடு கொண்ட மருந்து, இது  சித்த மருத்துவத்தில் ஆண்டு ஆண்டு காலமாக மேற்கண்ட நோய்களுக்கும் பயன்படுத்திய வருகின்றனர்.மேலும் தங்கத்தினை அடிப்படையாக வைத்துசெய்யப்படும் மருந்துகள் காச நோய், ஆட்டோ இம்யூன் நோய் ரூமடாய்டு ஆர்தரைட்டிஸ் போன்ற நோய், தீவிரதோற்று,ஆண்மை குறைவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 
     அக்காலம் முதலே பற்பம் செந்தூரம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர்,
இவற்றின் மூலக்கூறு அளவும் பெரும்பாலும் 10⁻⁹  அளவுதான்,இது தற்போதை nano medicine உடன் ஒத்துப்போகிறது.
 சரி தங்க பற்பம் கிட்னி ஃபெயிலியரை உண்டாக்குமா ?
   நிச்சயம் உண்டாக்கலாம்,அது எப்படி என்றால்  நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் முக்கிய பங்கு நம் இரு கிட்னிக்குதான்,இதன் கழிவுகளை வடிகட்டும் உறுப்புகளில் எதாவது நச்சு பொருட்கள் அதிகம் சேர்ந்தால் அதன் செயல் தன்மை குறைந்து அது செயல் இழந்து  ஃபெயிலியர் ஆகும். 
      மேற்கண்ட Gold nano particles கிட்னியை பாதிக்கும் தன்மை உள்ளது என ஆய்வுகள் உள்ளன, ஆனால் தங்க பற்பத்தை கையாலும் போது அப்படிப்பட்ட பக்க விளைவுகளை காணப்படுவதில்லை என ஆய்வுகள் கூறுகிறது இதற்கு காரணம் சித்த மருத்துவத்தில் தங்கத்திற்கு  செய்யபடும் சுத்தி மற்றும் பற்பம் ஆக்கும் முறையேஆகும்,ஆனால் இதில் ஏதாவது ஒரு முறை சரிவர செய்யாமல் விட்டாலும் சரியான முறையில் மருந்து அளவு(dosage) தவறினாலும் மருந்தின் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம்‌.


எம்ஜியாருக்கும் தங்க பற்பத்திற்கும் என்ன தொடர்பு ?
  அக்காலத்தில் அவர் தங்க பற்பத்தை பயன்படுத்தியதாகவும், அந்த மருந்தால் அவருக்கு உடல் நிலை குன்றியதாகவும் கூறுகிறார்கள்.இது ஒரு  செவிவழிச் செய்திதான் ஆதார பூர்வ தகவல் எதுவும் இல்லை, உண்மையில் சித்த மருத்துவத்தின் மீது மாற மதிப்பு கொண்ட தமிழக முதல்வர்களில் அவரும் ஒருவர் அவர் ஆட்சி காலத்தில் சித்த மருத்துவத்திற்கு பெரும் தொண்டு செய்தார்.
 மேற்கண்ட செய்தி இன்னும் நம்மிடம் சுற்றி கொண்டிருந்தாலும், தங்க பற்பம் பக்க விளைவுகள் அற்றது என்பது தற்கால ஆய்வு முடிவுகளே நமக்கு உணர்த்துகிறது.

  நன்றி, சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி தொடர்புக்கு 8778587349.
இந்த கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1)https://benthamopen.com/FULLTEXT/TONMJ-5-16#:~:text=Zinc%20oxide%20nanoparticles%20have%20many,to%20alleviate%20their%20toxic%20effects.
2)https://www.sciencedirect.com/topics/medicine-and-dentistry/gold-nanoparticle#:~:text=Au%20NPs%20have%20been%20used,cancer%20types%20and%20diseased%20organs.
3)https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6320918/#:~:text=The%20advantages%20of%20noble%20metal,positive%20effect%20on%20biological%20systems.
4)COMPARATIVE IN-VITRO ANTICANCER ACTIVITY OF THANGA PARPAM (SIDDHA GOLD DRUG)IN BREAST, LIVER, PROSTATE AND LUNG CANCER CELL LINES
Sulthan Shajahan, Arul Amuthan.
5) குணபாடம் : தாது - சீவ வகுப்பு by மருத்துவர் தியாகராஜன்

செவ்வாய், 3 ஜனவரி, 2023

மாட்டு இறைச்சியும் தமிழ் மருத்துவமும் - மாட்டு இறைச்சியைப்பற்றி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மருத்துவம் எவ்வாறு விளக்குகிறது

  தமிழ் இலக்கியங்களில் மாட்டு இறைச்சியைப்பற்றிய சில விவரங்கள்:

     இவ்வுலகில் வாழும் பாக்டீரியா முதல் திமிங்கிலங்கள் வரை  புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தத்தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. 
ஒருவரின் உடை மற்றும் உணவுப்  பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்றே.
 தற்போது‌ பல விவாதங்களை அடைந்து வருகின்ற மாட்டு  இறைச்சி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று  என்பது மட்டும் அல்லாமல் தற்போதும் தமிழகத்தின் உணவிலும் மற்றும் நம் நாட்டு ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மாட்டு இறைச்சி பற்றி சங்க காலம் நமக்கு கூறுவது என்ன?
சங்க காலப் பாடல்களில் ஒன்று.
வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309

பசுவை உண்ணல்:
பசுவினைப் பலியை பற்றி செய்தி அகநானூற்றில் காணப்படுகிறது. 
பசு புனிதமாகவும் தெய்வமாகவும் கருதப்படுவதற்கு முன்னர் உணவிற்காகப் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு பசு உணவிற்காகப் பயன்படுத்தப் படுவதைப்
 பின்வரும் நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

    
            வெட்சி வீரர்கள் பால்தரும் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற  கரந்தை வீரர்களைக் கொன்று பசுவை கொண்டுச் சென்றனர்.போகும் வழியில் அவர்களுக்கு பசிக்கவே, கொண்டுச் சென்ற பசுக்களில் கொழுத்தது எது என பார்த்து அதை வெட்டி சமைத்து உண்டார்களாம் (அகம்:309) 
            எருதினைக் கொன்று அதன்    தொடையினை உண்ணல் (அகம்:265) போன்ற செய்திகள்இலக்கியங்களில் காணமுடிகிறது. 
               பசு வதை மற்றும் அதை உணவாக பயன்படுத்துவது போன்ற செய்திகள் நமக்கு கிடைக்க
பெற்றாலும்.மணிமேகலையில் போன்ற நூலில் உயிர்க்கொலை கூடாது,பசுவை கொல்லக் கூடாது போன்ற செய்திகள்இடம்பெறுகிறது."
                ஆனாலும், இன்றும் பசுவை கொன்று உண்ணும் பழக்கம் நம் தமிழகத்தில் இருந்துவருகிறது.
இருந்தாலும் சிலர் இதை உண்பதை தவிர்க்க தான் செய்கிறார்கள்.
     ‌‌           சங்கப் பாடல்களில் “ஊன்” உணவு பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன,யானை,புலி முதலியவைகளை உண்ட வரலாறு கூட உண்டு.
                முக்கியமாகப் பசுவைக் கொன்று தின்ற செய்தி பழைய பாடல் களில்காணப்படுகிறது.

'புலையன் ஆவுரித்துத் தின்றான். பாணன் கன்றை உரித்துத் தின்றான். (நற்3-9) வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர்". (அகம் 129

"சிறுபாணாற்றுப்படை” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” எனக் கூறும் "(175-77) 

                  இங்கு விருந்தாளிகளுக்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச்   சோறும் கொடுத்த செய்தி விவரிக்கப்படுகிறது.
                 உழவர் பெருமக்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு (129)நன்னூல் உரையில் பாணர் பசு இறைச்சியைத் தின்ற செய்தி வருகிறது. (சூத் 310) 
பசுவைக் கொன்று பாறையில் அதன் இறைச்சியைக் காய வைத்த ஒரு நிகழ்ச்சியை அகநானூறுல் இடம்பெற்றுள்ளது (390).
           மேற்கண்டவை மூலம் தமிழ் நாம் அறிவது தமிழ் மக்கள் பசு  தெய்வமாகவும்,அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை உணவாகவும்,இதர தேவைகளுக்கும் பயன்படுத்தினர் என்று அறியப்படுகிறது.

சரி தமிழ் மருத்துவம் மாட்டு இறைச்சியைப்பற்றி என்ன கூறுகிறது:

மாட்டு இறைச்சியின் குணம்:
              மேலே கொடுக்கப்பட்டுள்ளது பாடல் மற்றும் விளக்கம் பதார்த்த குண விளக்கம் என்ற நூலில் இருந்து கிடைக்கப்பெற்றது,இதில் மாட்டின் இறைச்சி உண்பவருக்கு சகல நோய் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 சரி மாட்டின் பால்,நெய்,கோமூத்திரம், சாணம், தயிர்,நெய் இதை பற்றி தமிழ் மருத்துவம் என்ன  கூறி உள்ளது.

பசும் பாலின் குணம்:
பசு மூத்திரம் குணம்:
பசு நெய் குணம்:
பசு வெண்ணெய் குணம்:
பசு மோரின் மருத்துவ குணம்:
பசு சாணத்தின் மருத்துவ குணம்:
  மாட்டின் பால், தயிர்,நெய், சாணம்,கோமூத்திரம் போன்றவை மருத்துவ குணம் பெற்றது என்பது இவற்றில் சில  அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது .
        மாட்டின் இறைச்சி சகல நோய்களை உண்டாக்கும் எனவும்,
 அதன்  இறைச்சி தவிர்த்து இன்ன பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக பதார்த்த குண விளக்கம் நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மக்களின் இறைச்சி வகையுள் மாட்டு இறைச்சி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது,மாட்டின் இறைச்சி அப்படி சகல நோய்களையும் உண்டாக்கும் என்றால் அதற்கான நவின ஆராய்ச்சி முடிவுகள் அவசியம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி
தொடர்புக்கு 8778587349.
இக்கட்டுரை எழுத ஆதாரம்:
1)https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4589:2018-06-14-12-06-16&catid=65:2014-11-23-05-26-56
2)http://fbtamildata.blogspot.com/2017/09/2_21.html?m=1
3) பதார்த்த குண விளக்கம் -காசீம் முகைதீன் ராவுத்தர் 
4)நோய் இல்லா நெறி டாக்டர்- மருத்துவர் கோ துரைராசன்