திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உணவா ? மருந்தா ? நஞ்சா ? ( பகுதி 2) -சித்த மருத்துவம்

 வணக்கம், உணவா ? மருந்தா ? நஞ்சா ? என்ற கட்டுரை தொடரில் இரண்டாம் பகுதி பற்றி நாம் காண்போம்,

முதல் பகுதியை படிக்க பகுதி 1


                                                                               

மக்கள் தற்காலத்தில் எளிய மருத்துவத்தை  பெரிதும் விரும்புகின்றனர்,இந்த கொரோனா பெரும்தொற்றுக்கு பிறகு தமிழர் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மீது நமக்கு தற்போது பெரிய ஆர்வம் மீண்டும் வந்துள்ளது,சமீபத்தில் உலக சுகாதார மையம் நம் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு  உலகளவில் அங்கீகாரம் கொடுத்துள்ளது இதன் மூலம் பல ஆராய்ச்சிகள் சித்த மருத்துவத்தின் மீது நடக்கும்,நம் சித்த மருத்துவத்தின் தொன்மையை, அறிவியலின் துணை கொண்டு ஒரு புதிய பாதைக்குள் பயணம் செய்ய  வைக்கமுடியும்,நம் நாட்டு மக்கள்  மட்டும் பயன் பெரும் சித்த மருத்துவத்தை உலக மக்கள் அனைவரும்  பயன் பெற வாய்ப்புகள் உள்ளன.

இப்போது நாம் நம் கதைக்கு வருவோம்,உணவு மருத்துவம் பற்றி ஏன் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை? சீனா தவிர ஆங்கில மருத்துவத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட  உலக நாடுகள்  இப்போதுதான் வலுவாக உணவே மருந்து (FOOD IS MEDICINE) என்ற கருத்துக்கள் தங்கள் பாதங்களை  எடுத்து வைக்கிறது, தவறான உணவு பழக்கத்தை  கடைபிடித்ததின் விளைவு உலகம் முழுவதும் 5 இல் ஒரு இறப்பு சரியான உணவு அதாவது அவர் அவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவு இன்மையால்,உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது,இந்த இறப்பு விகிதம் புகையிலையால் ஏற்படுவதை விட அதிகமாம்.உடலுக்கு ஏற்ற உணவு என்றால் என்ன ?,  உணவானது அவர் அவர் வயதிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,உணவானது அவர் அவர் உழைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,இதில் முக்கியமாக  நோய்க்கு ஏற்ற உணவு அவசியம், இந்த உணவு தேவை என்பது ஒவ்வொரு நோய்க்கும் மாறுபடும்.


இந்த உணவு மருத்துவம் ஒரு நோய் உள்ளவர்களுக்கு எப்படி பயன் அடைய  வைக்கிறது ?


நோய்க்கு அல்லது உடல் சுகமின்மைக்கு குறிப்பிட்ட  உணவு வகைகள் ஒரு மருந்தாக செயல் படுகிறது  இதை  Nutraceuticals மற்றும்  Functional Foods என்றால் என்ன, என்பதை பற்றி முதல் பகுதியுள் நான் பேசி உள்ளேன்.

நமக்கு திடிர் என்று ஒரு உடல் நல குறைவு வருகிறது என்று கற்பனை செய்து கொள்வோம்,ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலில் நாம் உள் நோயாளியாக அட்மிட்  ஆகிரோம்,மருந்து மற்றும் ஹாஸ்பிடல் செலவு செய்த பில்லுடன் நாம் மருத்துவமனையில் உண்ட உணவு பில்லும் சேர்த்து வரும்,அதில் வரும் உணவின் பில்லோ  நமக்கு வழங்கிய மருந்தின்  அளவே வரும், ஆனால்  நாம் உண்டது கீச்சாதி,இட்டிலி  போன்றவையாக இருக்கும்,  கேட்டால் ஹாஸ்பிடல் டயட் என்று கூறுவார்கள்.என்ன cm அம்மா 1 கோடி ரூபாய்க்கு இட்டிலி சாப்பிட்ட கதை போன்று உள்ளதா ?அந்த மருத்துவமனைகளில் ஏன் அவ்வளவு  உணவு தொகை வாங்குகிறார்கள் என்று தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.


Medically Tailored Meals (MTM) என்றால்

என்ன ?


Medically Tailored Meal ( MTM) என்றால் அவர் அவர் நோய் நிலைக்கு ஏற்ற உணவுகளை, உணவியல் நிபுணர்களால் மற்றும் பிற  மருத்துவ நிபுணர்களால் சரியான முறையில் நோயின் நிலை அறிந்து நோய் நிலையை மேம்படுத்த பரிந்துரை செய்யப்படும் உணவுகளாகும்.

1980 இதில் அமெரிக்காவில்  HIV /AIDS  நோய்க்கான சரியான மருந்து கண்டுபிடிக்காத போது, அந்த  நோயாளிகளுக்கு நோய் முற்றாமல்  நோயை  சிறந்த ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகளை கொடுத்து மருத்துவம் செய்தனர்,இதனால் அந்த நோயாளிகளின் நோய்  குறைந்தது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.இதில் இருந்து உணவே மருந்து ( Food as medicine)  என்ற இயக்கம் அமெரிக்காவில் வளர தொடங்கியது.இதில் இருந்துதான் உணவே மருந்து  medically tailored meal (MTM) சாக மேலை நாடுகளில்  உருவானது .நமது கொரோனா கால கட்டத்திலும் MTM போன்ற உணவு வகைகளை,ஊட்டச் சத்து மற்றும் உணவு நிபுணர்கள்  நமக்கு பரிந்துரை செய்தனர்.


 MTM  இதனால் என்ன பயன் ?


 தங்களது நோய்களுக்கு  சரியான  உணவு வகைகளை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு, மாதம் தங்களது மருத்துவ செலவில் 16 % பணத்தை சேமிப்பு செய்கின்றனராம்.மேலும் நாள்பட்ட நோய் உள்ள நோயாளிகள் இந்த உணவே மருந்தை (MTM ) பின்பற்றும்போது  50 % வரை அவர்கள் நோய்க்கு மருத்துவமனைக்கு வருகை தரும் எண்ணிக்கை குறைகிறதாம்.தற்போது    வெளிநாடுகளில் pharmacy நிறுவனங்களுக்கு  பிறகு,சில நிறுவனங்கள் medically tailored meals- சை வீட்டிற்க்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள்.இதை நகைப்பாக farmacies என்று கூட கூறுகின்றனர் ,கூடிய விரைவில் இந்த வகை உணவுகளை நம் நாட்டில் உள்ள உணவு சேவை நிறுவங்களிலும் காண வாய்ப்பு உள்ளது. 


MTM  பற்றி சித்த மருத்துவம் என்ன கூறுகிறது ?


 முதலில் பத்தியம்( Regimen of Diet ) என்றால் என்ன என்பதை காண்போம்,  சித்த மருத்துவத்தில் பத்தியம் என்பது நோய்க்கு மட்டும் அல்லாமல் நாம் எதுத்துக்கொள்ளும் மருந்துக்கும் கூறப்பட்டுள்ளது,பத்தியம் என்பது  அந்த நோய்க்கு சேர்க்க வேண்டிய உணவு  பொருட்களையும்,சேர்க்க கூடாத உணவு  பொருட்களையும்  கூறுகிறது.இப்படி பட்ட பத்திய வகைகளில் உப்பில்லா பத்தியம், இச்சா பத்தியம்,கடும் பத்தியம் போன்ற நோய்க்கு ஏற்றவாரு பல வகை பத்தியங்கள் உள்ளன.இப்படி ஒரு நோயாளிக்கு பத்தியம் கூறும் போது  அவர்களின் உடல் பலம்,உடல் நிலைமை,நோயின் வன்மை,காலம்  மற்றும் சீதோஷண நிலை  இவைகளை சரியான படி அனுசரித்து பத்திய முறை சித்த மருத்துவர்கள் கூறுவார்கள்.


பத்தியத்தின் பெருமை:


''பத்தியத்தா லுண்டாகும்  பண்டிதற்குப் பேராண்மை

 பத்தியத்தா லுண்டாகும் பண்டிதங்கள் - பத்தியத்தை

விட்டிடலை விட்டார் பிணிவகைகள் வித்தரிக்கும்

விட்டாற் பறக்கும் வினை”

-தேரன் வெண்பா செய்-600


பத்தியத்தை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவம் செய்யும் மருத்துவனும்,மருந்தும் மேன்மை கொள்வார்கள், மேலும் நோயாளியும் குணமடைவான் ,அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் நோய் மிகும்.இப்படி பத்தியத்தின் பெருமை பற்றி சித்த மருத்துவம் கூறுகிறது.

எனவே பத்திய முறையுடன் மருந்தை மருத்துவர் கூறும்படி பின்பற்றினால் நோய் தீருவது சுலபம் என்று புரிகிறது,இங்கு பத்தியம் கடைபிடிக்கவில்லை நோய் தீராது அல்லது மிகும் என்று கூறி உள்ளனர்,இது ஏன் என்று  நாம் ஒரு உதாரணத்தோடு காண்போம்  சர்க்கரை நோய் வந்த நபர், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட மருந்தை ஒரு குறிப்பிட்ட டோஸேஜில்  எடுத்து கொள்கிறார் என்றால், அவர் சரிவர உணவு கட்டுபாடு (அதிக சர்க்கரை சத்து உள்ள பொருட்களை தவிர்த்தல்)  அல்லது Regimen of Diet அல்லதுபத்தியம்  இல்லை என்றால் நோய் அப்போதைக்கு  கட்டுக்குள் வரும், ஆனால் நாள்பட நாள்பட நோய் அந்த மருந்துக்கு கட்டுப்படாது,நோய் மிகும் பிறகு முன்பு கொடுத்த மருந்தை விட வீரியம் மிக்க வேறு மருந்தை தர வேண்டும்,

இப்படிதான் நோய் தீராது என்று கூறி உள்ளனர்.சித்த மருத்துவத்தில் பத்தியம் என்றால் பெரிய வார்த்தையாக மக்கள் காண்கிறனர், ஆனால் இங்கு பத்தியமகா கூறுவதோ நம் நாட்டு உணவு வகைகளைதான் ஆனால் அதில்  கொஞ்சம் வித்யாசம், அது எப்படி என்றால் சில நோய்களுக்கு காய்கறிகளை முற்றியதாக உணவில் சேர்க்க சொல்லாமல் பிஞ்சாக எடுக்க கூறுவோம். உதாரணம் கத்தரி பிஞ்சு,முருங்கை பிஞ்சு,அவரை பிஞ்சு போன்றன வாத நோய்க்கு சிறந்த பத்திய உணவு.வாழை கச்சல் சர்க்கரை நோய்க்கு சிறந்த பத்திய உணவு.



என்னிடம் வருபவர்கள் சிலர் சித்த மருத்துவத்தில் பத்தியம் சொல்விங்க சார் அதான் நிறைய பேர் உங்க மருத்துவத்த விரும்பமாட்டங்கிறாங்க என்று கூறுவார்கள்,எனக்கு சிரிப்பாக இருக்கும்,ஆனால்  சித்த மருத்துவத்தில் கூறும்  பத்திய முறை போலதான் தற்காலத்திய  Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இருக்கிறது,அனால் எனது பார்வையில் பத்திய முறையே என்பது  இதை விட மேம்பட்டதாக கருதுகிறேன்.பழைய சாதம் எப்படி Inflammatory Bowel Disease நோய்க்கு சிறந்ததோ, அப்படி பல உணவு வகைகள் பத்திய உணவாக  சித்த மருத்துவத்தில் உள்ளன.

சித்த மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் பலவகையான Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இந்த உலகுக்கு கிடைக்கும்.

   

தொடரும் ….



செவ்வாய், 24 ஜனவரி, 2023

உணவா? மருந்தா? நஞ்சா? - சித்த மருத்துவம்

          இந்த கட்டுரையில் நம் உணவு பட்டியலில்  உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் தற்கால உணவு வகைகளின் இருக்கிற  மருத்துவ தன்மை, அறிவியல்,அரசியல் பின்புலம்,வரலாறு போன்றவை பற்றி தொடர்களாக காண உள்ளோம்.

     தற்போதைய காலகட்டத்தில் உணவே மருந்து என்ற நோக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது மக்கள் செயற்கையாக செரிவு செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து வருகின்றனர் மேற்கத்திய நாட்டு மக்கள், பங்க்ஷனல் புட்ஸ்சை (Functional Foods),ஊட்டச்சத்து மருந்துகளை (Nutraceuticals) பெரிதும் விரும்பி உண்கின்றனர்.

முதலில் functional food என்றால் என்ன

         எந்த உணவானது உடலிற்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை தருவதோடு அல்லாமல், உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை மாற்றி அமைத்து,உடலியலின் தன்மையை மேம்படுத்துகிறதோ அல்லது நோயால் வரும் ஆபத்தை குறைக்கிறதோ அது Functional Foods என்று அழைக்கப்படும்.

Nutraceuticals என்றால் எனன் ?

      Nutraceuticals என்றால் இது உணவு பொருள், ஆனால் ஒரு நோயை போக்கும் மருந்தின் செயல் திறன் இதற்கு இருக்கும்,ஆனால் இது மருந்து என்ற பட்டியலில் இடம் பெறாது.

             புரியவில்லையா ,அட நம்ப வீட்டு தோட்டம்,அடுப்பங்கரையில இருக்க இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழ இத பத்திதான் நான் பேசறேன்.



             இன்னும் ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன் இஞ்சியை நாம் காலை எழுந்தவுடன் டீயில் போட்டு இஞ்சி டீயாக குடிப்பது, இஞ்சி பூண்டு பேஸ்டாக மட்டன் குருமாவில் சேர்ந்து உணவாக சேர்ப்பது, இப்படி சேர்ப்பதால் நமக்கு வயிற்றில் வாயு தொல்லை நீங்கி உணவு சீரணம் உண்டாக்கும் என்று நமக்கு தெரியும்,அப்போது இஞ்சி நமக்கு ஒருவகையில் functional food டாக செயல்பாடுகிறது,இதே இஞ்சியை சாறு எடுத்து,தேன்,கருப்பட்டி சேர்த்து டானிக்காக, இருமல் நோய்க்கு உண்டால் Nutraceuticals சாக செயல்படும், இந்த இஞ்சியை இன்னும் பக்குவப்படுத்தி கற்பமாக உண்டால் நரை-திரை-மூப்பின்றி வாழலாம் அதாவது anti ageing தன்மை உள்ளதாக இது இருக்கும்,இங்கு நாம் காணும் பொருட்கள் தனியாக கண்டால் உணவுகள், மூன்று ஒன்று சேர்ந்தால் கபத்தை போக்கும் இருமல் டானிக்.

             இதில் இருந்துதான் சித்த மருத்துவம் அல்லது மக்கள் பாசையில் நாட்டு மருத்துவம் உருவாகுகிறது, இது எப்படி உருவானது என்பது வேறு கதை அதை பிறகொரு கட்டுரையில் பார்போம்.இப்போது விசயத்திற்கு வருவோம் இப்படி பல பல மருந்துகள் நம் வீட்டிலும் மற்றும் தோட்டத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.இதை  முன்னோர்கள் உணவே மருந்து என்று கூறி சென்று விட்டார்கள், நாமும் உணவே மருந்து என்ற கலாச்சாரம் மறந்து, நுகர்வு உணவு கலாச்சாரத்தில் நோக்கி செல்ல தொடங்கிவிட்டோம்,மேலை நாடுகளில்  தற்போது Functional Foods, Nutraceuticals என்று நம் நாட்டு உணவுகள் வேறு பெயர்களில் பிரபலமாகி வருகிறது.

           2016 வந்த ஆய்வறிக்கை ஒன்றில் உலக நாடுகளில் எந்த எந்த நாடுகள் functional food சை அதிகம் விரும்பி உண்கின்றனர் என்ற ஆய்வு அறிக்கையில் ஐரோப்பிய,ஸ்பெயின்,பின்லாந்து,நெதர்லாந்து,ஸ்வீடன்  போன்ற நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன, இந்த உணவுக்கான சந்தை அதிக அளவில் உள்ள நாடுகளில் ஜப்பான்,கொரியா, அமெரிக்கா இவைகள் முன்னிலையில் உள்ளன, இந்த பட்டியலில், இந்திய தெற்கு ஆசியாவில் மட்டும் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.


ஏன் இந்த வேறுபாடு ?


              2022 ல் உலகளவில் Functional Foods மற்றும் இயற்கை உணவு பொருட்களின் சந்தை என்பது 22.4 பில்லியன் அமெரிக்க டாலர். வளர்ந்த மேலை நாடுகள்  தங்கள் உணவுகளை நல்ல  தரமாக உண்பதில் ஆர்வம் உள்ளவராக உள்ளனர்,அதற்கு ஏற்ற விலை தரவும் அவர்கள் தயார்,அனால் நமது நாடு அதற்கு மாறானது, இதுதான் இங்கு வித்தியாசம். மேலை நாடுகளில் Functional Foods, Nutraceuticals என்று பிரபலமாக உள்ளவை Probiotics Curd, Broccoli, Soya Milk போன்ற இன்னும் பல, இதில்  நம் கவனத்தை ஈர்க்கும் பொருள் என்ன என்றால், Probiotic curd இது ஒரு  தயிர்,ஆனால் இதில் நம் குடலிற்கு நன்மை செய்யக்கூடிய நூண்ணுயிரிகள் அதிக அளவில் உள்ளது.அனால் இந்த நூண்ணுயிரிகள் நம் வீட்டில் உள்ள தயிரில் மிக குறைந்த அளவே உள்ளது , இவ்வகை Probiotic நூண்ணுயிரிகள் நமது குடலை வழுவுப்படுத்தி நோய் உண்டாக்கும் நூண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும், வயிரே அனைத்து நோய்களுக்கும் பிரதானம் என்ற கருத்து சித்த மருத்துவத்தில் உள்ளது, இப்படிப்பட்ட வயிரை வலுப்படுத்தி உடலை காக்கும் செயலை நம் கண்ணுக்கு தெரியாத இந்த நூண்ணுயிரிகள் செய்கின்றன.


              

 இந்த வகை தயிர்  தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது ஒரு கப் ரூபாய் 40 முதல் 50 வரை விற்க்கப்படுகிறது, இப்படி விற்கப்பட்டும் probiotics நமது அன்றாட உணவிலே உள்ளது, இந்த உணவு உங்கள் பலருக்கு பரிச்சயமனா உணவு பொருள்தான், அதுதான்  பழைய சாதம், சென்னை Stanley மருத்துவ கல்லூரியில் நடத்திய ஆய்வில் பழைய சாதத்தை தங்கம் என குறிப்பிட்டுள்ளானர்,இதில் குடலிற்க்கு நன்மை செய்யும் probiotics நூண்ணுயிரிகள் அதிகம் உள்ளதாகவும் , Inflammatory Bowel Disease (குடல் அழற்சி நோய்  என்று கூறலாம்), நோய்க்கு சிறந்த உணவாக இருப்பதோடு இல்லாமல், Inflammatory Bowel Disease  உள்ள நோயாளிகள் நோய் தீவிரம் அடைந்தால்  குடல் புண்கள் பெரிதாகி குடலில் துளை உண்டாகிவிடும்,இது ஒரு ஆபத்தான கட்டமாகும் இந்த நிலைக்குள் அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி,ஆனால் பழைய சாதம் எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு மேற்கண்ட அளவுக்கு நோய் தீவிரம் உண்டாக்காமல் பழைய சாதம் தடுகிறதாம்.இதனால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு பெரிய பொருள் செலவு தவிர்க்கப்படுகிறது. இதே நோய்களுக்கு probiotics தயிரும் நன்மை தருவதாக கூறும் பல ஆய்வுகள் உள்ளது.

சித்த மருத்துவம் பழைய சாதம் பற்றி என்ன கூறுகிறது ?


''பழஞ்சோற்றை யந்தப் பழைய நீரா காரக்

கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளில் -எழுந்தாது

பித்தவா தம்போம் பெரும்பசியா மெய்யெங்கும்

மெத்தவொளி வுண்டாகுமே''

                                                                                                அகு

இரவில் சாதத்தில் நீர் ஊற்றி காலையில் சூரிய உதயத்தில் அந்த (பழைய சாதம்) நீராகாரத்தை   உண்டால் சுக்கில விருத்தி உண்டாகும்,உதராக்கினி (உடல் சூடு) சீராகும், உடல் முழுவதும் ஒரு ஒளி உண்டாகும், பைத்திய வாதம் போய் அறிவு தெளிவு போன்றவை உண்டாகும்.

            பட்டை திட்டப்படாட  சம்பா அரிசி அல்லது பொன்னி அரிசி அல்லது முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த அரிசியில் இந்த நீராகாரத்தை நாம்  செய்யலாம்.


 இப்போது எதற்கு இந்த அறிவுரை?

             மேற்கண்ட பழைய சாதத்தை பற்றிய செய்தி பல பேர் முன்பே அறிந்த ஒன்றாக இருக்கலாம், இப்படி பல பல உணவு வகைகளை நாம் இன்னும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.மார்கெட்டில் டப்பாவில் அடைத்து வைத்து விற்கப்படும் ஒன்று நம் வீட்டின் அடுப்பங்கரையிலே உள்ளது.இதைதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஆராய்ச்சி செய்ய தொடங்கி உள்ளனர்.இந்த பழைய சாதம் 5 star ஹோட்டலில் ரூபாய் 2455 விற்க்ப்படுவதாக நான் கேள்விப்பட்டேன், இது சிலருக்கு நகைப்புக்குறிய செய்தியாக தோன்றலாம்,ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோமா, தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் செய்தி அப்போது நகைப்புக்குறிய செய்தியாக இருந்தது, இப்போது நிலைமை வேறு.நோய் வராமல் இருக்கவும், நோய்களுக்கு மருந்து நம் வீட்டில் இருந்து தொடங்குகிறது,அதிலிருந்துதான் நம் சித்த மருத்துவமும் தொடங்குகிறது, நோய்களுக்கு மருந்து தரும் சித்த மருத்துவரும்  Functional Foods, Nutraceuticals சைதான் நமக்கு  பத்தியமாக கூறுகின்றார்.


சரிப்பா நீராகாரத எப்படி செய்யரது ?

 

சூரிய வெப்பம் அதிகம் உள்ள கோடை காலத்தி தண்ணீர் ஊற்றியதில் இருந்து சுமார் 6-8 மணி நேரம் ஊறவிட்டால் போடும்,மற்ற காலங்களில் 8-12  மணி நேரம் ஊறவிட வேண்டும்,இப்படி ஊறவிடுவதால் நமக்கு தேவையான நூண்ணுயிரிகள் வளர்ந்துவிடும்.இப்படி செய்யும் பழைய சாதம் மண்பானையில் வைத்து செய்தல் இன்னும் நன்மையாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.


தொடரும்….,


நன்றி,

 மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி, காவேரி சித்த கிளினிக் சேலம்,877-858-7349




சனி, 21 ஜனவரி, 2023

கஞ்சாவும் - சித்த மருத்துவம்

                             மரிஜுவானா,டோப், வீட், போன்ற வார்த்தைகளை இதற்கு முன் உங்களில்  சிலருக்கு மிகப் பரிச்சயமாக இருக்கலாம் அல்லது பல பேருக்கு புதியதாக  இருக்கும். இவை அனைத்தும் கஞ்சாவின் வேறு பெயரை குறிக்கும் .இந்த கட்டுரையில்  கஞ்சாவின் அரசியல்,வரலாறு, மருத்துவ பயன்கள் போன்ற அறியப்படாத செய்திகள் பற்றி நாம் காண்போம்.

கஞ்சா மீதுள்ள சட்டங்களும் அதன் வரலாறும்.


                                   இந்தியாவில் மயக்க மருந்துப்பொருள் மற்றும் மனநிலைக்கு ஊருசெய்யும் பொருள்கள் சட்டம்,1985 (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985),என்ற  சட்டத்தின்படி கஞ்சா மற்றும் அதனை சார்ந்த உபபொருள்களை நுகர்வதும் மற்றும் கஞ்சாவின்  மலர்,மொட்டு,பிற உபபொருள்களை வைத்து இருபதும்  சட்டவிரோதமான செயலக கருதப்படுகிறது,இதன்படி கஞ்சாவின் பயன்பாடு பல மாநிலங்கலில்  தடை செய்ய ப்படுள்ளது.இதே  சட்டத்தின்  கீழ் அபினும் வருகிறது.

                                   1985 ஆண்டுவரை இந்தியாவில் கஞ்சா,பாங்க்,சாரஸ் போன்றவை சட்டப்பூர்வமாக இருந்தது,ஆனால் அமெரிக்கா 1961 ஆண்டு போதை பொருட்கள் தடுக்க பல பிரச்சாரங்களை உலகம் முழுவதும் மேற்கொள்ளத் தொடங்கியது , இதை இந்திய, கஞ்சா பயன்பாடு  என்பது இந்தியாவின்  வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் என கூறி  அமெரிக்காவின்  பிரச்சாரத்தை நிராகரித்து வந்தது.எண்பதுகளின் தொடக்க காலத்தில் போதை பொருட்கள் பயன்பாடு என்பது அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்க,அமெரிக்கா தனது  சர்வாதிகாரத்தால் (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985) இந்தியாவில் போதை பொருள் தடுப்பு சட்டத்தை   நிறைவேற்றியது.இந்த சட்டமானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும்,தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் சட்டபூர்வமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. 


தண்டனைகள்:

                               இந்த சட்டத்தின்படி 1 கிலோகிராம் அளவுக்கு குறைவாக கஞ்சா வைத்திருந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,1 கிலோகிராம் மேல் 20 கிலோகிராமுக்கு குறைவாக வைத்து இருந்தால் 10 வருடம் சிறை அல்லது 1 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,20 கிலோகிராம் மேலாக வணிக ரிதியாக வைத்து இருந்தால் 10 முதல் 20 வருடம் சிறை அல்லது 1 முதல் 2 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் .அனால் கஞ்சா இலைகளுக்கு சிறிது விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது,உதாரணமாக கஞ்சா இலையில் இருந்து தயாரிக்கப்பதும்  பாங் போன்ற பொருள் இந்தியாவில் அனுமதி உண்டு.

                                        அனால்  ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை கடந்த 2022 ஆண்டு மருத்துவ ரீதியாக மற்றும் மருந்து அடிமைத்துவம் இல்லாமல் பொழுதுபோக்கிற்கு கஞ்சாவை பயன்படுத்த, அமெரிக்கா நாட்டின்  போதை பொருள்  தடுப்பு சட்டத்திலிருந்து கஞ்சாவிற்கு  விதிவிலக்கு அளிக்கப்பட்ட  சட்ட மசோதாவை  நிறைவேற்றியுள்ளது.ஐரோப்பிய நாடுகளும் கஞ்சாவை மருத்துவ ரீதியாக பயன்படுத்த  சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது, இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

வரலாறு:

                                        2200 கிமூவில் கஞ்சாவில் இருந்து வரும் நார்களை கொண்டு ஜப்பானியர்கள், சீனர்கள் துணிகள், கயிறு போன்றவைகளாக பயன்படுத்தி உள்ளனர்.

                                       இந்தியாவில் கஞ்சா பயன்பாடு என்பது 2000 கிமூ முதல் உள்ளது.அதர்வவேதத்தில் 5 புனித தாவரங்களுள் கஞ்சா மன நிலையை சாந்தி செய்யும் தாவரமாக கூறப்படுகிறது. கஞ்சாவானது உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும் காலம் தொட்டு  இந்திய வரலாற்றில் பயணப்பட்டு வந்துள்ளது.சுஷ்ருதா சம்ஹிதாவில், கஞ்சா கண்நோய்,கபம்,பேதி போன்ற நோய்களை போக்கும் மருந்தாக என கூறப்பட்டுள்ளது.

                                       1798 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் பாங்,கஞ்சா,சரஸ் போன்றவற்றின்  புழக்கத்தை கட்டுப்பாடு செய்ய,அதன் மீது தனி வரி வசூல் செய்தது.பின் 1894 ஆம் கஞ்சாவை பற்றிய கள ஆய்வில் கஞ்சா பயன்பாடு என்பது மனிதனில் கோபத்தை அதிகரிக்க செய்து தீய செயல்களுக்கு வழிசெய்வதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

பாங்,தண்டை பானம்: 

                                     பாங்,தண்டை பானம்  என்பது நாம் தமிழ் நாட்டில் கேள்வி படாத  வார்த்தையாக இருந்தாலும்,வட இந்தியாவில் மிகபிரபலமான பானங்கள்.தண்டை அடிப்படையில் மசால பொருகள்,பால் மற்றும் பழ  வகைகளை கொண்டு செய்யப்படும் ஒரு பானமாகும்,பாங் என்பது தயிரை கொண்டு செய்யப்படும் பானம்  என்றாலும் ,இவை இரண்டுக்கும் மூல பொருள் கஞ்சா இலையாகும்.

                                    நமக்கு ஹோலிப் பண்டிகை என்றால் நினைவுக்கு வருவது கலர் கலர் பொடிகள் மட்டும்தான் அனால் வட இந்தியாவில் ஹோலி என்றால் கலர் கலர் பொடிகளுடன்,பாங்,தண்டை  பானங்கள் நினைவுக்கு வரும்.

                                   வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருத்தலத்தில் தண்டை பானம்  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.பாங்,தண்டை பானங்களை  அளவாக உண்டால் உடலுக்கு மிக நம்மை தரக்கூடியது என அங்கு  நம்பப்படுகிறது, சிவன் ஆலகால விஷத்தை உண்ட பிறகு, தொண்டை நீல நிறம் அடைந்ததாகவும்,அந்த வலி போக பார்வதி தேவி பாங்கை அளித்தார் என்று கூறப்படுகிறது.ராஜஸ்தானில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாங் கடைகள்  ஜெய்சல்மர் மற்றும் புஷ்கர் நகரங்களில் உள்ளன.

சரஸ்:

                                     சரஸ் என்பது கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்பதும் ஒரு  பிசின் போன்ற பொருள்,இது மிக போதை தன்மை கொண்டது,  இது 1  கிராம் அளவில் 2000 ரூபாய் வரைக்கூட விற்பனை செய்யப்பதுகிறது   

கஞ்சா:

                                   தமிழகத்தில் கஞ்சாவின் இலைகள்  பெரும்பாலும்  புகையாக   பிடிக்கப்பதுகிறது, புகைபிடிப்பதற்காக  கிடைக்கப்படும் கஞ்சா இலையானது மஞ்சரி,மகரந்தம்,விதை,இலை காம்பு போன்றவையுடன் கலந்துதான் கிடைக்கும்,புகை பிடிப்பவர் இலையை மட்டும்  தனியாக பிரித்து எடுப்பர்,பின் புகை பிடிப்பதற்கு என பிரத்தியேகமாக விற்கப்படும் OCB பேப்பரை கொண்டு சிகரெட்டே போன்று செய்து புகை பிடிக்கின்றனர்.

கஞ்சாவில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் :

                                     கஞ்சா பல மூலக்கூறு சேர்மங்களைக் கொண்டுள்ளது,அதில்  டெல்டா-9 டெட்ராஹைட்ரோ கன்னாபினோல் (THC) மற்றும் கன்னாபிடியோல் (CBD) ஆகியவை மிகவும் பிரபலமானவை. THC என்பது (கஞ்சாவின்) மரிஜுவானாவின் முதன்மையான மூலப்பொருளாகும், இதற்கு  போதை தன்மையை உண்டாகும் செயல் உள்ளது, கஞ்சாவின் விதை,கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சா எண்ணெய் போன்றவை தற்போது மருந்து சந்தையில்  கிடைக்கிறது,அனால் இந்த பொருள்களில் போதை தன்மை உண்டாகும் THC குறைவாக உள்ளவாறு முறைப்படுத்தி விற்கப்படுகிறது,இப்படி கஞ்சாவில் இருந்து கிடைக்கும் பொருள்களை SUPER FOOD என்று அழைப்பார்கள்.

சித்த மருத்துவத்தில் கஞ்சா:

                                  மேற்கண்டவை நீங்கள் படித்ததால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும், போதைப் பொருள் என்று தடை செய்த ஒரு பொருளை, அதன் மருத்துவ பயனை கண்ட ஏகபத்திய அரசுகள் அதன் தடையை நீக்கி ஒரு ஒழுங்கு முறையில் அதை பயிர் செய்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

                                  இந்த விஷயத்தில் நாம் நோக்க வேண்டியது என்னவென்றால் உலக நாடுகள்  இப்போது பின்பற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் 2000 ஆண்டுகளுக்கு  முதலே  சித்த மருத்துவத்தில்  நடைமுறையில் உள்ளது,எப்படியென்றால் கஞ்சாவிற்கு போதையூட்டும் நச்சு தன்மை இருந்தாலும், அதைப் போக்க சுத்தி முறை என்ற ஒரு முறை சொல்லி அதன் நஞ்சுத் தன்மையை நீக்கி, மருந்தாக தனியாகவும் பிற மருந்துகளுடன் கலந்தும் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். நச்சு தன்மையை நீக்கும் சுத்தி முறைகளை கூறியது மட்டுமல்லாமல் கஞ்சாவால் ஏற்படும் அடிமைத்தனதை  போக்கவும் இலைகள்ளியாதி குடிநீர், சுக்கு குடிநீர் போன்ற மருந்துகளை கூறியுள்ளனர்

                                   பல சித்தர்கள் கஞ்சாவை மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்று கூறியுள்ளனர் ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லும்படி கோரக்கர் சித்தர் கஞ்சாவை  மூலாதாரமாக வைத்து பல மருந்துகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளார், அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே அவர் பெயராலே அந்த மூலிகைக்கு அதாவது கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்று பெயர் ஒன்று உண்டு.

கஞ்சாவின் மருத்துவ பயன்:

"மூலக் கிராணியறு முன்புள்ள பேதிகட்டும்

சாலமயக் கும்பசியுஞ் சாருங்காண்ட் தூலஞ்செய்

வாதமொடு ஐயமும்போம் வன்காப்ப னுந்தொலையும்

கோதறுகஞ் சாச்சடைக்கு".

                                                                            - அகத்தியர் குண வாகடம் 

                                   கஞ்சாவினால் மூல நோய்,கிராணி நோய்,பேதி,அதிதூலம்,கப நோய், கரப்பான் நோய் இவை போகும், மிகுந்த பசி,மயக்க நோய் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

                                  ஆண்மை பெருக கொடுக்கப்படும்  லேகிய  வகைகளில் கஞ்சாவானது ஒரு சிறப்பு மூலப் பொருளாக சேர்க்கப்படுகிறது.இதை சேர்க்கப்படும் போது மருந்தின் வீரிய தன்மை பன்மடங்கு பெருகும்.

                                 பேதியை நிறுத்த பயன்படும் கட்டுவாதி குளிகை போன்ற மாத்திரைகளில் கஞ்சா கசாயம் சேர்க்கப்படுகிறது

                                 கஞ்சா பயன்படுத்துவது இந்தியா கலாச்சாரத்தில் ஒன்று என்றாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும் வட இந்தியாவை சார்ந்ததாக  உள்ளது, நம் ஊரில் ரோட்டோரத்தில் குப்பைமேனி செடியை பார்ப்பது போல் வட இந்தியாவில் கஞ்சா செடி மிகவும் செழிப்பாக வளர்ந்து கிடப்பதை அங்கு சென்றால் நாம் காணலாம்.

                                 இன்று வீதியில் நடமாடும் சாமியார்கள் பல பேர் கஞ்சாவை புகைத்துக் கொண்டு உலவுகின்றனர், இதை பார்த்த சிலர் என்னிடம்  சித்தர்கள் என்றால் கஞ்சா புகைத்துக் கொண்டு இருப்பார்களா ? என சித்தர் பெருமக்களை இழிவுபடுத்தும் விதமாக கேட்பர், சித்தர்கள் கஞ்சா புகைத்தார்களா என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் புகைத்திருந்தாலும்,அதை மருந்தாக புகைத்திருப்பார்கள் இன்றி போதைக்காக புகைத்திருக்க மாட்டார்கள். இன்று நடைமுறை பட்டிருக்கும் கஞ்சாவின் ஒழுங்கு நடவடிக்கை அக்காலத்திலேயே சித்த மருத்துவத்தில் சித்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அவர்கள் ஒழுக்கத்திக்கு மேற்கண்ட விஷயங்களே சிறு சான்று.

                                மனித மூலையில் ஆயிரக்கணக்கில்  கஞ்சா மூலக்கூறுகளுக்கு ரெசெப்டர்கள் உள்ளதாக ஆராய்ச்சி  முடிவுகள் கூறுகிறது,அனால் ஏன் இவ்வளவு ரெசெப்டர்கள் உள்ளது என மூழுமையான விடை கூறும் முயற்சியில் இன்னும் தற்கால அறிவியல் நடைபொட்டுக்கொண்டுதான் இருக்கிறது ,அனால் மேற் கண்டவற்றை படித்தல் இதற்கான விடை உங்களுக்கே  புரியும். 

நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.